Thursday, October 15, 2009

ஆசிரியரின் ஆசியுரை

நீண்ட நாட்களாக கிடப்பில் போட்ட எனது பதிவிற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் எண்ணத்தில் எனது பாடசாலை முன்னாள் கணித ஆசிரியரான திரு.குமுக்கேசன் அவர்களினால் எம்மால் ஒழுங்குபடுத்தப்பட்ட நவராத்திரி விழா 2006 அன்று வெளியிடப்பட்ட நினைவு மலரில் எழுதப்பட்ட ஆசியுரையை உங்களுக்கு விருந்தாக்குகின்றேன்.

பொறுப்பாசிரியரின் விண்ணப்பம்
ஏரம்பன் எந்தையை,
எங்களின் தந்தையை;
கலைநிலவின் கால்வாசியை
குடுமியில் குடிவைத்த கயிலை வாசியை;
அவத்தைப் புரிந்து,
அவஸ்தைப்படுவோர் பாவத்தைப் போக்கும் சிவத்தை;
கொன்றை மலர் சூடும் ஒன்றை
நன்றுக்கெல்லாம் நன்றான நன்றை;
நீலத்தை நீள்மிடற்றில் ஏற்றிய மூலத்தை;
நீரை (கங்கா நீரை) நீறை (திருநீறை) முறையே
உச்சியில் உடம்பில் உவந்து அணியும்
அறத்தின் வேரை;
வினை வேதனை நீக்கும் வேதனை;
ஒலி தரும் உடுக்கையைக் கையிலும் - வரிப்
புலி தரும் உடுக்கையை மெய்யிலும் தாங்கி சதிர் நடத்தும்
சந்திர சூடியை
சரவணன் "டாடி"யை;
தண் தமிழின் தந்தையை,
செந்தழலேந்தும் விந்தையை;
கருத்தனை, கனகசபை நிருத்தனை
கறைக் கழுத்தனை அஞ்சு எழுத்தனை,
எருது மேல் எழுந்தருளும் ஏகனை
அனேகனை மாதொரு பாகனை,
வழுத்தினேன், வாழ்த்தினேன், திருமுன் சென்னி
தாழ்த்தினேன்;
அம்பிகையை மணந்த அந்தி வண்ணா!
அக்கன்னா போல் அருள் விழிகள் மூன்று
அமைந்த முக்கண்ணா!
நீயே எமக்கு பாதுகாப்பு,
உன் காப்பிருந்தால் ஏது தோற்பு?

Monday, September 7, 2009

வணக்கம்




நான் ஒரு வலைப்பதிவாளர் ஆவது என்னுடைய ஒரு கன்னி முயற்சி. என்னுடைய பதிவுகளில் பலப்பல விடயங்களை உள்ளடக்குவதற்கு நான் முயற்சிக்கிறேன். அவை எனது வாழ்வில் நிகழ்ந்தவையாக அல்லது எனக்கு அறிவிக்கப்பட்டவையாக அல்லது நான் அறிந்துகொண்ட விடயங்களாக இருக்கும்.
என்னுடைய ஆக்கங்கள் தரமானவையாகவும் என்னைப் புடம் போடுபவையாகவும் இருக்க உங்கள் அனைவருடைய ஆதரவுகளையும் வேண்டி நிற்கின்றேன்.
நன்றி.